வியாழன், மே 18, 2006

சிக்கலான வழக்கு.

என் நண்பர் ஒரு சிக்கலான வழக்கு ஒன்றைச் சொன்னார். அதை வாசகர்கள் பார்வைக்கு விடுகின்றேன்.

ஒருமுறை அ, ஆ, இ என்ற மூன்று நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது இ-க்கு அ-வோடும் ஆ-வோடும் மிகப் பெரிய சண்டை ஏற்பட்டது. அதனால் அ-வும் ஆ-வும் தனித்தனியாக இ-யை கொன்று விட முடிவு செய்தனர் (அதாவது ஒருவர் செய்த முடிவு மற்றவருக்கு தெரியாது).

அ இ-யை எப்படிக் கொல்வது என்று யோசித்து இ-வுடைய தண்ணீர் பாட்டிலில் விஷத்தைக் கலந்து விட்டான்.

இதை அறியாத ஆ-வோ இ தண்ணீர் இல்லாமல் சாகட்டும் என்று இ-யுடைய தண்ணீர் பாட்டிலை உடைத்து விட்டான். அதனால் தண்ணீர் கிடைக்காமல் இ தாகித்து தாகித்து இறந்து விட்டான்.

வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அ மற்றும் ஆ இருவருமே தங்கள் குற்றத்தை மறைக்காமல் ஒப்புக் கொண்டனர்.
ஆனால் அ-வுடைய வழக்கறிஞரோ என்னதான் அ தண்ணீரில் விஷத்தைக் கலந்திருந்தாலும் அதைக் குடித்து இ இறக்க
வில்லை. தாகித்து தாகித்து தான் இ இறந்தான். அதனால் அ-வை விடுதலை செய்து ஆ-வை தண்டிக்க வேண்டும் என்று
வழக்காடினார்.
ஆனால் ஆ-வின் வழக்கறிஞரோ ஆ தண்ணீர் பாட்டிலை உடைத்திருக்காவிட்டாலும் இ விஷத்தை குடித்து
இறந்திருப்பான். முதலில் விஷத்தைக் கலந்தது அ தான் என்பதாலும் அந்த விஷத்தை குடிக்காமல் இருக்கவே
ஆ-வின் செயல் உதவியது என்பதாலும் ஆ-வை விடுதலை செய்து அ-வை தண்டிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

நீங்கள் ஒரு வழக்கறிஞராயின் இவ்வழக்கை எப்படிக் கொண்டு செல்வீர்கள்? அல்லது நீங்கள் நீதிபதியாயின் என்ன தீர்ப்பு வழங்குவீர்கள்?

செவ்வாய், மே 16, 2006

குடித்துவிட்டு உளறாதே...!

நான் ரசித்த குஷ்வந்த் சிங் ஜோக்குகளில் ஒன்று.

இரண்டு குடிகார நண்பர்கள் நன்றாக குடித்து விட்டு தங்கள் அறைக்குத் திரும்பினர். அறைக்கு வந்தபின் ஒருவன் தன் சட்டையை கழற்றி மாட்டுவதற்க்கு சுவற்றைப் பார்த்தான். ஆனால் அங்கு எந்த ஆணியும் தென்படாததால் அவன் ஒரு ஆணியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வந்தான். வந்தவன் குடிபோதையில் ஆணியை தலைகீழாக வைத்துக் கொண்டு சுவற்றில் அடிக்க ஆரம்பித்தான். மிக நீண்ட முயற்சி செய்தும் ஆணி சுவற்றில் இறங்காததால் என்ன காரணமாக இருக்கும் என்று ஆணியை உற்று கவனித்தான். அப்பொழுது தான் அவனுக்குத் தெரிந்தது ஆணி தலைகீழாக இருப்பது. ஆனால் அவன் என்ன செய்தான் தெரியுமா? தன் மற்றொரு குடிகார நண்பனை அழைத்து "இதோ பாருடா. முட்டாள் பயல்கள். ஆணியின் தலையை கீழே வைத்துத் தயாரித்திருக்கிறார்கள்" என்றுக் கூறினான்.

அதற்கு அவனுடைய நண்பன் "அடப்போடா குடிகாரப் பயலே. குடித்துவிட்டு உளறாதே.
ஆணியைத் தயாரித்ததெல்லாம் சரிதான். ஆனால் அந்த ஆணி எதிர்த்த சுவற்றிற்குரியது"
என்றானே பார்க்கலாம்.

நண்பர்கள் இருவரும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் அல்லவா?

ஞாயிறு, ஏப்ரல் 16, 2006

பத்து ரூபாய் எங்கே...?

ஒருநாள் இரண்டு கிராமத்துவாசிகள் ஒரு மொத்த வியாபாரக்கடையிலிருந்து தலா 300 பழங்கள் வாங்கிக் கொண்டு சில்லரை வியாபாரம் செய்ய சென்றனர். முதலாமவர் ஒரு ரூபாய்க்கு இரண்டு பழங்கள் வீதம் 300 பழங்களை 150 ரூபாய்க்கு விற்றார். இரண்டாமவரோ ஒரு ரூபாய்க்கு மூன்று பழங்கள் வீதம் 300 பழங்களை 100 ரூபாய்க்கு விற்றார். ஆக 600 பழங்கள் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.



மறுநாள் அவ்விருவரும் அதே போல் மொத்த வியாபாரக்கடையிலிருந்து தலா 300 பழங்கள் வாங்கிக் கொண்டு சில்லரை வியாபாரம் செய்ய சென்றனர். இன்று ஒரு வாடிக்கையாளருக்கு மொத்தமாக 600 பழங்கள் தேவைப்பட்டது. இப்பொழுது இரண்டு பேரிடமும் மொத்தம் 600 பழங்கள் இருப்பதால் இருவரும் கூடி அந்த வாடிக்கையாளரிடம் 600 பழங்களையும் ஒன்றாக விற்று விட முடிவு செய்தனர்.


ஆனால் இருவரும் வேறு வேறு விலைகளில் பழங்களை விற்பதால் அதில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது.
முதலாமவருக்கு விலையை குறைத்து விற்க விருப்பமில்லை. இரண்டாமவருக்கோ விலையை கூட்டி விற்க விருப்பமில்லை. என்ன செய்வது? இருவரும் கூடி ஆலோசித்தனர். முடிவில் அவரவர் விற்கும் விலைக்கே 600 பழங்களையும் விற்பது என்று அதாவது இரண்டு ரூபாய்க்கு 5 பழங்கள் வீதம் விற்பது என்று முடிவு செய்து வாடிக்கையாளரிடம் இரண்டு ரூபாய்க்கு ஐந்து பழங்கள் என்று கூறினர். வாடிக்கையாளரும் சரி என்று கூறி 600 பழங்களை பெற்றுக் கொண்டு 240 ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு சென்று விட்டார். (600/5=120; 120*2=240). இப்பொழுது 100+150=250 என்று கிடைக்க வேண்டிய தொகையில் 10 ரூபாய் குறைகிறது. இருவரும் இப்பொழுது சண்டையிட்டுக் கொண்டு நிற்கிறார்கள்.

உங்களில் யாருக்கேனும் நன்றாக கணக்கு தெரிந்தால் அவர்களின் பிரச்சினையை தீர்த்து வையுங்களேன். உங்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

சனி, ஏப்ரல் 15, 2006

இந்த தடவை ஆபரேஷன் செய்யும் போது...

என் கேரள நண்பர் சொன்ன குட்டிக் கதை.

முன்னாலே ஒருவன் வயிற்று வலியாலே ரொம்ப கஷ்டப் பட்டுக்கிட்டு இருந்தாங்க. அதனால ஒரு டாக்டரைப் போய் பார்த்தான். அப்போ இப்போ மாதிரி ஸ்கேனெல்லாம் இல்லாததாலே டாக்டர் அவனை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தாரு. அப்புறம் அவன்கிட்டே ஆபரேஷன் செஞ்சாத் தான் சரியாகும் அப்படீன்னு சொல்லிட்டாரு. அவனும் சரின்னு ஆபரேஷன் செஞ்சுக்கிட்டான்.


கொஞ்ச நாளைக்கப்புறம் அவன் திரும்பவும் டாக்டர்கிட்டே வந்து வயிற்று வலி சரியாகலே அப்படீன்னான். அதனாலே டாக்டர் மறுபடியும் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தாரு. பார்த்தால் எக்ஸ்-ரேலெ ஒரு குச்சி தெரியுது. வயிற்றுக்குள்ளே குச்சி எப்படிப் போகும்ன்னு டாக்டர் யோசிச்சுக்கிட்டே அவனிடம் மறுபடி ஆபரேஷன் செஞ்சுத் தான் அதை எடுக்கணும்டு சொல்லிட்டாரு. அதனாலே அவன் ரெண்டாவது ஆபரேஷனுக்கு ஒத்துக்கிட்டான். ஆனா ஒண்ணு பாருங்க.. ஆபரேஷன் செஞ்சு பார்த்தால் முதல் ஆபரேஷன் செய்யும் போது டாக்டர் மறந்து போன பெரிய ஊசி ஒண்ணு அவன் வயிற்றுக்குள்ளே இருந்துச்சு.

கொஞ்ச நாளைக்கப்புறம் அவன் திரும்பவும் டாக்டர்கிட்டே வந்து இப்பவும் வயிற்று வலி சரியாகலே அப்படீன்னான். இந்த தடவையும் டாக்டர் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தாரு. பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. காரணம் எக்ஸ்-ரே ரிசல்ட்லே ஐந்து தலை நாகம் ஒண்ணு தெரிஞ்சசுது. உடனே அவனிடம் வந்து ஆபரேஷன் செஞ்சிருக்கும் போது பாம்பெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு கத்த ஆரம்ப்பிச்சிட்டாரு. ஆனால் அவன் ஐயோ டாக்டர் எனக்கு பாம்பு சாப்பிடும் பழக்கமெல்லாம் கிடையாதுன்னு சொல்லிட்டான். அப்புறம் எப்படி பாம்பு உள்ளே போயிருக்கும்ன்ணு யோசிச்சுக்கிட்டே மூணாவது தடவையா ஆபரேஷன் செஞ்சாரு. ஆணா பாருங்க இவரு ரெண்டாவரு ஆபரேஷன் செஞ்சப்ப மறந்து போன ஹேண்ட் கிளவ்ஸ் உள்ளே இருந்துச்சு.

மூணாவது ஆபரேஷன் செஞ்சுக்கிட்டு வீட்டுக்கு போன அவன் கொஞ்ச நாளையிலேயே திரும்பவும் டாக்டர்கிட்டே வந்து இப்பவும் வயிற்று வலி இருக்குண்ணு சொன்னான். டாக்டர் மிகவும் சலிப்புடன் இன்னும் வயிற்றை வலிக்குதா? மறுபடி எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்போம் என்று சொன்னார். அதற்கு அவன் சரிங்க டாக்டர் எக்ஸ்-ரே எடுத்துப் பாருங்க. அப்புறம் ஆபரேஷன் கூட செய்யுங்க. ஆனா ஒரு கன்டிஷன் அப்படீன்னு நிறுத்தினான். டாக்டரும் என்ன கன்டிஷன்னு கேட்டாரு. அவன் கேஷுவலா என்ன சொன்னான் தெரியுமா?

இந்த தடவை ஆபரேஷன் செய்யும் போது என் வயிற்றுலே ஒரு ஜிப் (zip) பிட் (fit) பண்ணிடுங்க. அப்பத்தான் நமக்கு தேவைப்பட்டப்பல்லாம் ஈஸியா திறந்து மூடிக்கலாம் அப்படீண்ணான்.

இது எப்படீ இருக்கு? நல்ல ஐடியா இல்லீங்களா?

திங்கள், மார்ச் 27, 2006

வளைகுடாவில் தொலைந்தவனே..

என்னைத் தொட்ட கவிதைகளில் ஒன்று. காரணம் வளைகுடா அனுபவமோ என்னவோ...
அதை வாசகர்களில் பார்வைக்காக இங்கு தருகிறேன்.




இளமையின் சுமை
அறியாதவனா நீ..?
கரைபுரளும்
என் கண்ணீரின்
கதை தெரியாதவனா நீ..?
சுகங்களின் முகவரியை
எனக்குச் சொல்லிக் கொடுத்தவனே..
பிறகு ஏன்
தனிமையில் என்னை கிடத்தி
கடல் கடந்து
யாரை கெளரவப்படுத்தப் போயிருக்கிறாய்..??
எதை பெறுவதற்காக
என்னை இழந்துக் கொண்டிருக்கிறாய்..??
வற்றிவிடும் இளமை வராது திரும்பவும்..
வளைகுடா மறந்து வா சீக்கிரம்..!!
இந்த முறையாவது
என் வயிற்று வலியையும் வாந்தியையும்
வாங்கிக் கொள்ள என் பக்கத்தில் நீயிரு..!!

--அபிரேகா அலாவுதீன்

நன்றி: வழுத்தூர்.காம்

சனி, மார்ச் 25, 2006

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்...

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாகவே வளருமா? எங்கே செய்து பாருங்கள். வளர்கிறதா என்று பார்ப்போம்.

நாம் தவறாக விளங்கி வைத்திருக்கும் சில பழமொழிகளில் இதுவும் ஒன்று. என்ன ஒரு சமாதானம். என்ன தான் தவறாக விளங்கி வைத்திருந்தாலும் இந்த பழமொழியைப் பொறுத்தவரை நல்லவிதத்தில் பொது நலச் சிந்தனையோடு தான் விளங்கி வைத்திருக்கிறோம். நாம் விளங்கி வைத்திருப்பது போன்று என்னதான் ஊரில் உள்ள பிள்ளைகளையெல்லாம் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் தன் பிள்ளைகளையும் அன்போடும், பாசத்தோடும் அரவணைத்து ஊட்டி வளர்த்தால் தான் வளரும். அப்படியானால் இந்த பழமொழி எதைத் தான் சொல்ல வருகிறது?

முதலில் நாம் ஒன்றை சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். என்னதான் தன்னுடைய பிள்ளையாக இருந்தாலும் பிள்ளையைப் பெற்றெடுப்பதென்னவோ மனைவி தான்.

இப்பொழுது மனைவி என்பவளும் ஊரில் உள்ள யாரோ ஒருவரின் பிள்ளைதான் இல்லையா?

தன் பிள்ளையை வயிற்றில் சுமந்திருக்கும் ஊரான் பிள்ளையாகிய தன் மனைவியை அவள் கருவுற்றிருக்கும் போது ஊட்டி ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது தான் இதன் கருத்து.

இவற்றைப் போல் தவறாக விளங்கப் பட்ட இன்னும் சில பழமொழிகளும் தமிழில் உள்ளன. அவற்றிற்கான பொருள்களை யாராவது தெரிந்தவர் இருந்தால் - அவற்றிற்கு விளக்கமளித்தால் மிகவும் பயனாக இருக்கும்.

செவ்வாய், மார்ச் 21, 2006

விருந்துக்கும் பந்திக்கும் என்ன வேறுபாடு?

ஒரு முறை வலைப்பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வலைப் பதிவின் தமிழ் இலக்கணம் கசக்குமா? என்ற பதிவின் பின்னூட்டத்தில் யாரோ ஒரு சகோதரர் விருந்துக்கும் பந்திக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டிருந்தார். இது சம்பந்தமாக ஒரு பதிவு எழுதி அதை அந்த பதிவிற்கு இணைப்பு கொடுக்கலாம் என்று நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் என்னால் அந்த பதிவை கண்டு பிடிக்க முடியவில்லை. யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து இதை அந்த சகோதரருக்கு தெரியப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பந்திக்கு முந்திக்கொள். படைக்குப் பிந்திக்கொள். இந்த பழமொழியைக் கேட்டிருக்காதவர் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமானது. இதன் அர்த்தம் சாப்பாட்டிற்கு முந்திக் கொள் - ஏதாவது சண்டை பிரச்சினை என்றால் ஓடி ஒளிந்துக் கொள் என்பது தானே. அப்படி அல்ல. தமிழில் அழகான, கருத்துச் செறிவுள்ள பல பழமொழிகள் இருந்தாலும் அவற்றில் சிலவற்றிற்க்கு நாம் தவறான அர்த்தத்தையே விளங்கி வைத்திருக்கிறோம். அப்படிப் பட்ட சில பழமொழிகளில் ஒன்று தான் இதுவும்.

முன்னர் முடியாட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாடும் தனது நாட்டைக் காக்க நான்கு வகைப் படைகளைக் கொண்டிருந்ததை நாமெல்லாம் அறிவோம். அவை 1. காலாட் படை, 2. குதிரைப் படை, 3. யானைப் படை மற்றும் 4. தேர்ப் படை ஆகியவை. இதுவும் நாம் அறிந்ததே. ஆனால் நம்மில் பலர் அறியாத ஐந்தாவது படை ஒன்றும் இருந்தது. அந்த ஐந்தாவது படையில் மொத்தம் ஏழு (எத்தனை என்று சரியாக நினைவில்லை) வரிசைகள் (ஆங்கிலத்தில் Line அல்ல. Batch என்று சொல்லலாமா?) இருந்தன. அந்த வரிசைகளுக்கு பந்திகள் என்றுப் பெயர்.

ஒரு நாட்டின் இராணுவ பலத்திற்கு படை வீரர்களின் எண்ணிக்கையும் மிக முக்கியமானது. அதற்காக நாட்டில் உள்ள அனைத்து ஆண்களும் இராணுவத்தில் சேர்ந்து விட்டால் நாட்டின் விவசாயம் போன்ற வளர்ச்சிப் பணிகளில் யார் ஈடு படுவது? அதனால் முறையான பயிற்சி பெற்ற ஒரு பிரிவினர் நான்கு படைகளிலும் மற்றொரு பிரிவினர் அதாவது சரதாரண குடிமக்கள் நாட்டின் வளர்ச்சிப் பணிகளிலும் ஈடு பட்டிருந்தனர். இந்த இரண்டாவது பிரிவினர் நாட்டிற்கு ஆபத்தான கட்டத்தில் மட்டும் போர்களில் ஈடுபடுவார்கள்.

இதில் நாட்டு மக்களால் சிறப்பாக கருதப் பட்டது எதுவென்றால் ஐந்தாவது படையின் முதல் பந்தித் தான். இதன் காரணம் மக்கள் உழைப்பிற்கு கொடுத்த முக்கியத்துவமே. அதே சமயம் இதை காரணம் காட்டி கோழையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஐந்தாவது படையின் முதல் பந்திக்கு முந்திக் கொள்ள வலியுறுத்தவே பந்திக்கு முந்திக்கொள். படைக்குப் பிந்திக்கொள் என்ற பழமொழி ஏற்பட்டது.

இந்த பழமொழியில் வரும் பந்தி என்ற தூய தமிழ் வார்த்தையைத் தான் நாம் விருந்து நடக்கும் போது நடை பெறும் வரிசையை (Batch)குறிக்க அதாவது முதல் பந்தி இரண்டாவது பந்தி என்று சொல்லுவதற்கு பயன் படுத்துகிறோம். இன்றளவும் முஸ்லிம்களின் வீடுகளில் நடக்கும் விருந்துகளில் எத்தனையாவது பந்தி நடக்கிறது என்று கேட்பதை நாம் கேட்டிருப்போம். அதே போல் நாம் விருந்துக்கு போகிறோம் என்று தான் கூறுவோம். மாற்றிக் கூறுவதில்லை. ஆக விருந்து என்பது வேறு. பந்தி என்பது வேறு.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்னை தானே வளரும். இந்த பழமொழியின் விளக்கம் தெரியுமா? இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்.